ADDED : ஏப் 16, 2024 10:17 PM
அரை நுாற்றாண்டிற்கு முன் நடைபெற்ற தேர்தல் திருவிழாவை நினைத்துப் பார்க்கையில், சுவாரஸ்யம் தலைதுாக்குகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதுவும் இல்லாத காலம் அது. பிரசாரத்திற்கு நேரக் கட்டுப்பாடு கிடையாது. தலைவர்கள், விடிய விடிய பிரச்சாரம் மேற்கொள்வர்.
தமிழகத்தில், காங்., - தி.மு.க., - கம்யூ., என மூன்றே மூன்று கட்சிகள் தான் இருந்தன. மூன்றும் ஒன்றையொன்றை எதிர்த்து, தனித்தனியாக தேர்தல் களத்தில் நின்றன.
தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே தான் கடும் போட்டி இருந்தது. காங்கிரசுக்கு ஆதரவாக நடிகர் திலகமும், தி.மு.க.,விற்கு ஆதரவாக எம்.ஜி.ஆரும் பிரசாரம் மேற்கொண்டனர்.
மாலை, 7:00 மணிக்கு சிவாஜி வருவதாக, பிரசார மேடையில் அறிவிப்பர். ஆனால் அவர், மறுநாள் விடியற்காலை, 5:00 மணிக்கு தான் வருவார். ஆனாலும் கூட்டம் கலையாது. மேடையில் விடிய விடிய, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இடையிடையே அவ்வப்போது, 'இதோ இன்னும் சற்று நேரத்தில் சிவாஜி வந்து விடுவார்' என அறிவித்து, இரவு முழுவதையும் ஓட்டி விடுவர்.
கூடியிருக்கும் மக்களில் சிலர், துண்டை விரித்து, அங்கேயே படுத்து விடுவரே தவிர, எழுந்து வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள்.
விடிகாலையில் சிவாஜி வருவார். துாங்காமல் பல இடங்களில் பிரசாரம் செய்ததால், களைப்புடன் காணப்படுவார்.
பத்து நிமிடமோ, பதினைந்து நிமிடமோ தான் பேசுவார். சினிமா பாணியில், வசன நடையில் அழகாக பேசுவார். காமராஜரின் பெருமைகளையும், சாதனைகளையும் பட்டியலிடுவார். கடைசியில் ஜெய்ஹிந்த் சொல்லி விட்டு, புறப்பட்டு விடுவார்.
எம்.ஜி.ஆர்., விடிய விடிய பிரசாரம் செய்ய மாட்டார். அதிகபட்சம், இரவு 11:00 மணி வரை தான் பிரசாரம் மேற்கொள்வார். அப்போது, தொப்பி, கண்ணாடி அணியாத அவரைப் பார்ப்பதற்கு, மக்கள் தவம் கிடப்பர்.
பிரசார வேனில் இருந்தபடியே, அரை மணி நேரம் பேசுவார். வார்த்தைக்கு வார்த்தை, அண்ணாதுரையைப் புகழ்வார்.
காமராஜரைப் பார்க்க, பெருங் கூட்டம் கூடும். அவரும் இரவெல்லாம் பிரசாரம் மேற்கொள்ள மாட்டார். பெரும்பாலும், தி.மு.க.,வைத் தாக்கித்தான் பேசுவார்; ஆனால் யார் பெயரையும் குறிப்பிட்டு பேச மாட்டார்.
'இந்த தி.மு.க.,காரன் வந்தான்; கள்ளுச் சாராயக் கடையெல்லாம் திறந்து விட்டான்; நாடு உருப்படுமாங்கிறேன்' என்பார்.
கருணாநிதியின் பேச்சைக் கேட்க, எங்கிருந்து தான் அவ்வளவு கூட்டம் வருமோ தெரியாது... அடுக்கு மொழியில், அட்டகாசமாய், சளைக்காமல் ஒரு மணி நேரம் உரையாற்றுவார். காங்கிரசையும், காமராஜரையும் கடுமையாகத் தாக்கிப் பேசுவார்.
காங்கிரஸ் அரசின் ஹிந்தித் திணிப்பைக் கடுமையாகச் சாடுவார்.
அப்போதெல்லாம், தலைவர்களின் தேர்தல் பிரசாரங்களில், அனல் கக்கும் வார்த்தைகள் இருக்கும்; அநாகரிகம் இருக்காது.
எதிர்க் கட்சியை விளாசுவர்; வசைமாரி பொழிய மாட்டார்கள்.
வரம்பு மீறிய வார்த்தைகளோ தனி மனித தாக்குதலோ இருந்ததில்லை; மேடைப் பேச்சு நாகரிகத்தைக் கடைபிடித்தனர்.
இப்போது யாருக்கும் பேசவே தெரியவில்லை; விரல்நுனியில் விவரத்தையும் காணோம்; துண்டுச் சீட்டைக் கொடுத்தால் கூட, படிக்கத் தெரியவில்லை.
குவார்ட்டரும், பிரியாணியும் மணக்க, இருநுாறா, முன்னுாறா என்ற கேள்வியுடன் திரியும் மக்களைத் தான் காண முடிகிறது.
-----வி.பத்ரி, வாசகர்

