எல்லா விஷயங்களிலும் தி.மு.க.,வை ஆதரிக்க முடியாது: பாலகிருஷ்ணன்
எல்லா விஷயங்களிலும் தி.மு.க.,வை ஆதரிக்க முடியாது: பாலகிருஷ்ணன்
ADDED : ஆக 20, 2024 09:14 PM
திருவாரூர்:''பா.ஜ., எதிர்ப்பதற்காக, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
மேட்டூருக்கு காவிரி தண்ணீர் வந்த பின்தான் டெல்டாவில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் முறைகேடு நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் கூறுகின்றனர். சட்டம் --ஒழுங்கை பா.ஜ.,தான் கெடுத்து வருகிறது. பல குற்றங்களில், பா.ஜ., கூட்டணியினர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
நிதி நிறுவன ஊழல், ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூட, அவர்களது கூட்டணி கட்சியினர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, கூலிப்படை கலாசாரம் பெருகியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக காவல்துறை என்ன செய்தது என்ற கேள்வி எழுகிறது.
தி.மு.க., - பா.ஜ., ரகசிய உறவு இருக்கிறது என, பழனிசாமி தெரிவித்துள்ளார். வெறும் வாயை மெல்லுகிறவருக்கு அவல் கிடைத்து விட்டது.
மத்திய, மாநில அரசுகள் சில விஷயங்களில் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. எதிரும் புதிருமாகவே இருக்க முடியாது. இதனால், இரு கட்சிகளும் இணைந்து விடுவதற்கான முகாந்திரம் உள்ளதாக கூற முடியாது.
மக்களை பாதிக்கும் வரி உயர்வை கண்டித்து, வரும் 28ல் ஆர்ப்பாட்டம் நடத்தபடும். தி.மு.க., அரசு செய்கிற எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கில்லை.
தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளது. அதற்காக, ஒரேயடியாக வரிகளை உயர்த்தக் கூடாது. மக்களின் தலையில் சுமையை அதிகரிக்கக் கூடாது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேலையின்மை அதிகரித்துள்ளது.
தி.மு.க., கூட்டணி என்பது வேறு; தி.மு.க., அரசு என்பது வேறு. மார்க்சிஸ்ட், அரசோடு கூட்டணி வைக்கவில்லை. பா.ஜ.,வை எதிர்ப்பதற்காக, தி.மு.க.,வோடு கூட்டணி வைத்துள்ளோம். அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்க்கிறோம். மகளிர் உரிமைத் தொகை கொடுக்கிறார்கள். நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களது நடவடிக்கையை பொறுத்து ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பதை முடிவெடுப்போம். எல்லா விஷயங்களிலும் தி.மு.க.,வை ஆதரிக்க முடியாது.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

