அரசு பஸ் மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சோகம்
அரசு பஸ் மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சோகம்
ADDED : செப் 08, 2024 06:22 AM

ராமநாதபுரம்: தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவரது மனைவி பாண்டி செல்வி (28), அவர்களின் மகள்கள் தர்ஷினா ராணி (8), பிரணவிகா (4) மற்றும் 12 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தை ஆகியோர் தங்கச்சிமடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
12 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ராஜேஷ் அவரது மனைவி பாண்டி செல்வி, அவர்களது இரண்டு மகள்கள் மற்றும் பாண்டி செல்வியின் உறவினர்களான செந்தில் மனோகரன் (70), அங்காலேஸ்வரி (58) ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று விட்டு, வாடகை காரில் தங்கச்சிமடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராஜேஷ் சென்ற காருக்கு முன்னால் திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென பஸ்சிற்குள் வாந்தி எடுத்ததால் அரசு பஸ் டிரைவர் திடீரென நெடுஞ்சாலையில் நிறுத்தினார். இதனால் அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜேஷ் அவரது மகன்களான தர்ஷினா ராணி, பிரணவிகா மற்றும் அவரது உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் டிரைவர் பிரிட்டோ (35), ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது 12 நாள் கைக்குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.