பா.ஜ.,வுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பா.ஜ.,வுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
ADDED : மார் 23, 2024 08:25 PM
சென்னை:பா.ஜ., கட்சிக்கு, தேசிய மலரான தாமரையை, சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, அஹிம்சை சோசலிஷ கட்சியின் நிறுவன தலைவர் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தேசிய மலரான தாமரையை, ஒரு அரசியல் கட்சிக்கு சின்னமாக ஒதுக்கியது அநீதி.
பா.ஜ., கட்சிக்கு தாமரை சின்னத்தை ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி, கடந்த செப்டம்பரில் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
என் மனுவை பரிசீலித்து, பா.ஜ.,வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.
இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக்கூறி, தள்ளுபடி செய்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
வழக்கை விசாரணைக்கு ஏற்கும்போது, உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் செலுத்திய 20,000 ரூபாயில், 10,000 ரூபாயை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும், மீதியை திரும்பப் பெறவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

