ADDED : ஆக 05, 2024 06:53 PM
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே திருவரங்கம் சந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருவரங்கத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மக்கள் அரசுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அக்கடையை தற்போது திருவரங்கம்-காக்கூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் தனியார் பட்டா நிலத்தில் மாற்றியமைக்க முயற்சி நடக்கிறது. அருகில் ஆதி காளியம்மன் கோயில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
அவ்வழியாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மது அருந்துவோர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை விவசாய நிலத்தில் இட்டுச் செல்வர். திருவரங்கம்-காக்கூர் ரோட்டில் டாஸ்மாக் அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆக.,19 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.