ஆபத்தான கலர் பந்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ஆபத்தான கலர் பந்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : ஏப் 03, 2024 01:26 AM
மதுரை:குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ஆபத்தான 'பாலி கிரிஸ்டல்' பந்துக்கு தடை கோரிய வழக்கில், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை செயலரிடம் விபரம் பெற்று, அதன் தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் கார்த்திக் கண்ணா தாக்கல் செய்த பொதுநல மனு:
'பாலி கிரிஸ்டல்' என்ற வண்ணமயமான பந்துகள், குழந்தைகள் விளையாட்டுக்குரிய பொருட்களாக கடைகளில் விற்கப்படுகின்றன. தண்ணீரில் ஊறவைத்து அவற்றை குழந்தைகள் விளையாடுகின்றனர்.அளவில் சிறியதாக இருந்தாலும் தண்ணீரில் ஊற வைக்கும்போது, ரசாயன மாற்றங்களால் விரிவடைந்து பந்து போல, பெரிய ஜெல்லியாக அது மாறுகிறது.
இதை விழுங்கினால் குடல் பாதையில் அடைப்பு ஏற்படும்; மரணத்தை உண்டாக்கும். இது, சானிடரி நாப்கின்களில் ஈரத்தை உறிஞ்ச பயன்படுத்தப்படுகிறது.
கிரிஸ்டல் பந்துவில் சீனா அல்லது கொரிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. சில நாடுகளில் இப்பந்துகளால் பல குழந்தைகள் இறந்துள்ளன; பல குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளன. பிற நாடுகளில் இப்பந்துகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான பந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும். இப்பந்துகள் மற்றும் அவற்றை கொண்ட பொம்மைகளை இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு:
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை செயலரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக விபரம் பெற்று அதன் தரப்பு வழக்கறிஞர் ஜூன் முதல் வாரம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.

