பா.ஜ., வேட்பாளர் நயினார் தகுதி நீக்கம் கோரி வழக்கு
பா.ஜ., வேட்பாளர் நயினார் தகுதி நீக்கம் கோரி வழக்கு
ADDED : ஏப் 18, 2024 12:05 AM
சென்னை:திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ராகவன் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, அமலாக்கத் துறையில் மனு அளித்துள்ளேன்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருந்ததால், தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கும் மனு அளித்தேன்.
இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கும், தகுதி நீக்கம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன், வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார்.
மனுவை இன்று விசாரிப்பதாக முதல் பெஞ்ச் தெரிவித்தது.

