அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர் விசாரணை கோரி வழக்கு
அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர் விசாரணை கோரி வழக்கு
ADDED : ஜூலை 24, 2024 09:26 PM
மதுரை:சிவகங்கை மாவட்டத்தில் ரோடு அமைக்கும் பணிக்கு அமைச்சரின் உதவியாளருக்கு விதிகளை மீறி டெண்டர் அனுமதித்தது குறித்து விசாரணை கோரிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
காளையார்கோவில் அருகே பெரியகிளுவச்சி கந்தசாமி தாக்கல் செய்த மனு:முதல்நிலை கான்ட்ராக்டராக உள்ளேன். சிவகங்கை மாவட்டம் கீழையூர்-தாயமங்கலம், சாலைகிராமம்-சருகணிவரை ரோடு அமைக்க பிப்.,2 ல் நெடுஞ்சாலைத்துறை மதுரை கண்காணிப்பு பொறியாளர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆன்லைனில் விண்ணப்பித்தேன். தமிழக அமைச்சர் பெரியகருப்பனின் நேரடி உதவியாளர் இளங்கோ. இவர் மமதி அன்கோ நிறுவன பங்குதாரர். விதிகளை மீறி அந்நிறுவனத்திற்கு டெண்டர் அனுமதிக்கப்பட்டது. ரோடு அமைப்பதற்கான கட்டுமான வசதி, கருவிகள் அந்நிறுவனத்திடம் இல்லை. அதற்கு தளவாடங்கள் உள்ளதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசை ஏமாற்றி, ஊழல் செய்துள்ளனர்.
டெண்டரை எதிர்த்து ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். டெண்டர் அறிவிப்பை நீதிமன்றம் ரத்து செய்தது. எதனடிப்படையில் மமதி அன்கோ நிறுவனத்திற்கு டெண்டர் அனுமதித்தனர் என்பதை விசாரித்தால்தான் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தெரிய வரும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள், இளங்கோவிற்கு எதிராக வழக்கு பதிய வேண்டும். அலுவலர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஆக.,1 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்டார்.