ADDED : ஜூலை 04, 2024 02:04 AM
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் சிற்பங்கள், ஓவியங்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தொன்மையான சுவாமி சிலைகள், சிற்பங்கள், துாண்கள் உள்ளன. இங்குள்ள மூன்றாம் பிரகாரம் உலக பிரசித்தி பெற்றது. துாண்கள், சிலைகள், ஓவியங்களை பலகைகள் வாயிலாக மறைத்து அறநிலையத்துறையினர் சேதப்படுத்துகின்றனர்.
அறநிலையத்துறை கமிஷனர், கோவில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பணி மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். கட்டுமானம், சிற்பம், ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு:
அறநிலையத்துறை கமிஷனர், கோவில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசிடம் அதன் தரப்பு வழக்கறிஞர் விபரம் பெற்று அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.