தனியார் மண்டகப்படிகளில் கள்ளழகர் அனுமதியை ரத்து செய்ய வழக்கு: உயர்நீதிமன்றம் பைசல்
தனியார் மண்டகப்படிகளில் கள்ளழகர் அனுமதியை ரத்து செய்ய வழக்கு: உயர்நீதிமன்றம் பைசல்
ADDED : ஏப் 02, 2024 11:35 PM
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது தனியார், ஜாதி அமைப்புகள், தனிநபர் பங்களாக்களில் கள்ளழகர் எழுந்தருள வழங்கிய மண்டகப்படிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், 'இதுவரை எவ்வித புகாரும் இன்றி திருவிழா நடந்துவருகிறது. நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரையில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. அழகர்கோவிலிலிருந்து மதுரை வண்டியூர் வரை 25 கி.மீ., துாரம் கள்ளழகர் பயணிக்கிறார். அவர் எழுந்தருளும் அரசு, பாரம்பரிய மண்டகப்படிகளை தவிர்த்து தனியார், ஜாதி அமைப்புகள், தனிநபர் பங்களாக்களில் எழுந்தருள கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது. மண்டகப்படி அனுமதி வழங்குகிறது. கோயில் நிர்வாகமே பாகுபாடுகளை உருவாக்குகிறது. இது சட்டப்படி ஏற்புடையதல்ல.
சட்டவிரோதமாக தனியார், ஜாதி அமைப்புகள், தனிநபர் பங்களாக்களில் கள்ளழகர் எழுந்தருள வழங்கிய மண்டகப்படிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற மண்டகப்படிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: கடந்த ஆண்டு திருவிழா மற்றும் தற்போதுவரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில நிமிடங்கள் சுவாமி எழுந்தருள்வார். தற்போது மேலும் சிலர் மண்டகப்படி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். மண்டகப்படி அமைக்க யாரும் அனுமதி கோரலாம். தகுதி அடிப்படையில் பரிசீலித்து அனுமதியளிக்கப்படும். பாரம்பரிய வழித்தடத்தில் கள்ளழகரை ஊர்வலமாகக் கொண்டுவந்து மண்டகப்படிகளில் எழுந்தருளச் செய்யப்படும். வழித்தடத்தில் மாற்றம் இல்லை. அழகர்கோவிலிலிருந்து ஏப்.,21ல் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுவார். ஏப்.,27ல் மீண்டும் கோயிலை சென்றடைவார். இதுவரை எவ்வித புகாரும் இல்லை. மனுதாரர் எவ்வித ஆதாரமும் இன்றி அச்ச உணர்வின் காரணமாக வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: இதுவரை எவ்வித புகாரும் இன்றி திருவிழா நல்லமுறையில் நடந்து வருகிறது. அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதில் நீதிமன்றம் தலையிட்டு எவ்வித உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

