ADDED : ஜூன் 26, 2024 06:57 AM

சென்னை : 'இன்று எட்டு மாவட்டங்களிலும், நாளை இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது.
அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநிலத்தில் அதிகபட்சமாக, நேற்று சின்னக்கல்லாரில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. 40க்கும் மேற்பட்ட இடங்களில், 1 முதல், 7 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், நாளை கனமழை பெய்யும். மற்ற இடங்களில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகும்.
சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக தொண்டியில், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை, ஈரோடு, கரூர் பரமத்தி, நாகை ஆகிய இடங்களில், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மற்ற இடங்களில், 36 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான வெப்பநிலைநிலவியது.

