ADDED : மே 12, 2024 12:10 AM
சென்னை:'இன்று முதல் 15ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் மழை பெய்துஉள்ளது.
அதிகபட்சமாக, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 10 செ.மீ., மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, ஒகேனக்கலில் 8 செ.மீ., சமயபுரத்தில் 7 செ.மீ., உசிலம்பட்டி மற்றும் முசிறியில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 15ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்றுடன் மழை பெய்யலாம்.
இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலுார், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, இன்று முதல் 15ம் தேதி வரை, உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை, இயல்பை விட அதிகமாகவும் வெப்பநிலை நிலவும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் வேலுாரில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில், லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.