ரூ.50ல் சென்னை டூ தி.மலை நேரடி ரயில் சேவை துவக்கம்
ரூ.50ல் சென்னை டூ தி.மலை நேரடி ரயில் சேவை துவக்கம்
ADDED : மே 02, 2024 09:16 PM
சென்னை:சென்னை கடற்கரை -- வேலுார் கண்டோன்மென்ட் ரயில் சேவை மே, 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், நிர்வாக காரணங்களுக்காக, இந்த ரயில் சேவை நீட்டிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக, நேற்று காலை தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனால், பயணியர் அதிருப்தி அடைந்தனர். பயணியர் சங்க நிர்வாகிகள் சிலர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆன்.என்.சிங்கை நேரில் சந்தித்து, ரயில் சேவையை துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இந்த ரயில் சேவை ஒரு வழியாக நேற்று துவங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், வேலுார் கண்டோன்மென்ட்டை இரவு 9:35 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.
திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு வேலுார் கண்டோன்மென்டை அதிகாலை 5:40 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, காலை 9:50 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.
சென்னை கடற்கரை - - திருவண்ணாமலை இடையே பயண கட்டணம், 50 ரூபாய். இந்த ரயில் சேவையை எந்தவித தடையும் இன்றி இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.