பூஜை அல்லாத மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசிக்கலாம் சிதம்பரம் கோவில்
பூஜை அல்லாத மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசிக்கலாம் சிதம்பரம் கோவில்
ADDED : ஆக 21, 2024 02:51 AM

சென்னை:'சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆறு கால பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில், கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாவின் போது, பக்தர்கள் கனகசபை மீது நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி, சிதம்பரத்தை சேர்ந்த சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனு தாக்கல்
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, முதல் பெஞ்ச் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது:
சிதம்பரம் நடராஜர் கோவிலில், இன்று வரை கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய தடை இல்லை. நாளொன்றுக்கு ஆறு முறை நடக்கும் கால பூஜைகளின் போது மட்டுமே, கனகசபைக்குள் நுழைய தடை உள்ளது.
கோவிலில் பிரதான தெய்வத்தை வழிபட, கனகசபையின் ஒரு பக்கத்திலிருந்து, பக்தர்கள் தற்காலிகமாக நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அறநிலையத்துறை போன்று, வெளியில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக மட்டுமே, இது செய்யப்பட்டுள்ளது.
கனகசபையில் நுழைவது தொடர்பாக, நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளில், இறுதி உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை, தற்போதைய நிலையே தொடரும்.
இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''கனகசபை நுழைவு விவகாரத்தில், பொது தீட்சிதர்கள் தரப்புக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை.
தடை உத்தரவு இல்லை
பதில் மனுவில் குறிப்பிட்டிருக்கும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் எந்த தடை உத்தரவும் இல்லை.
''விழா காலங்களில் பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிப்பது இல்லை,'' என்றார்.
இதையடுத்து, பொது தீட்சிதர்கள் தரப்பு பதில் மனுவை பதிவு செய்த முதல் பெஞ்ச், கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகள், சிறப்பு அமர்வில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்து, மனுதாரர் சம்பந்தமூர்த்தி ராமநாதனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.