ADDED : ஜூலை 31, 2024 07:39 AM
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், நாள்தோறும் ஆங்காங்கே திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. அரசியல் கட்சியினர் மீதான தாக்குதல் கொலை அதிகரித்துள்ளது.
ஒருபுறம் சமூக விரோத செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது, போதைப்பொருள் கலாசாரம். மறுபுறம் சமூக விரோதிகளை அடையாளம் காண, கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கத் தவறும் அரசாக, தமிழக அரசு செயல்படுவது தான்.
குறிப்பாக போதைப்பொருட்கள் பள்ளி, கல்லுாரி வளாகத்தின் அருகிலும், பொதுவெளியிலும் மிக எளிதாகக் கிடைக்கிறது.
அப்படி என்றால் போலீசார் நடவடிக்கை என்ன, அரசு யாருக்கு ஆதரவாக இருக்கிறது, பணத்துக்காகவா, அரசியல் கட்சியினரின் சிபாரிசுக்காகவா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சட்டம் -- ஒழுங்கில் முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி, தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு அழிக்க வேண்டும்.
அரசியல் கட்சியினர் உட்பட, பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள, சட்டம் - ஒழுங்கை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

