வேன் டிரைவர் மரணத்திற்கு இழப்பீடு; தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
வேன் டிரைவர் மரணத்திற்கு இழப்பீடு; தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 05, 2024 11:17 PM

மதுரை: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் வேன் டிரைவர் இறந்ததில், அவரது மனைவிக்கு அரசுப் பணி, இழப்பீடு வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.
சங்கரன்கோவில் அருகே வடக்குபுதுார் மீனா ஏற்கனவே தாக்கல் செய்த மனு:எனது கணவர் முருகன் வேன் டிரைவர். எங்களுக்கு 3 குழந்தைகள். முருகன் மார்ச் 8 ல் சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு செல்ல அச்சம்பட்டியை சேர்ந்த சில பெண்களை வேனில் ஏற்றினார்.
ராஜபாளையம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. முன்புறம் வந்த ஒரு ஆட்டோ மீது வேன் மோதியது. சங்கரன்கோவில் டவுன் போலீசார் 3 பேர் விசாரித்தனர். வண்டியை விட்டு கீழே இறங்கமாட்டாயா எனக்கூறி கணவரை மிதித்தனர். கணவர் மயக்கமடைந்தார். வேனிலிருந்த பெண்கள் போலீசாருக்கு எதிராக குரல் எழுப்பினர். வேனை போலீசார் ஓட்டிச் சென்றனர்.
தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கணவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். போலீஸ் காவலில் மரணமடைந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். எங்களுக்கு இழப்பீடு, அரசுப் பணி, குழந்தைகளின் கல்விச் செலவிற்கான தொகையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மார்ச் 26ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
தமிழக அரசு தரப்பு: முருகன் ஓட்டிய வேன் முதலில் ஒரு கார், பின் ஆட்டோ மீது மோதியது. அவர் நிலைதடுமாறியதில் டிரை சைக்கிள் மீதும் வேன் மோதியது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடியோ பதிவு ஆதாரம் உள்ளது. போலீஸ் காவலில் மரணம் நிகழவில்லை. பொது இடத்தில் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: மனுதாரருக்கு அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் பணி நியமனம் வழங்க வேண்டும். வரும்காலங்களில் கிராம உதவியாளர் பணிக்கு காலியிடம் ஏற்படும்பட்சத்தில் மனுதாரரை நியமிக்க கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனுதாரருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக உள்துறை செயலர், தென்காசி கலெக்டர் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: சுயநினைவின்றி தடுமாறி, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு முருகன் இறந்துள்ளார். இது இயற்கை மரணம் என உறுதியாகியுள்ளது. போலீஸ் விசாரணையில் மரணம் நிகழவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க முகாந்திரம் இல்லை.
அங்கன்வாடி மைய பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மீனா எட்டாவது வகுப்பு படித்துள்ளார். அலுவலக உதவியாளர் பணி வழங்குவதாக கூறியதை அவர் ஏற்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தொடர தடையில்லை. மீனா, தென்காசி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.