ADDED : ஆக 30, 2024 02:37 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில், 3ம் கட்ட அகழாய்வில், இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, சூதுபவள மணி என, 1,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், அலங்காரம் செய்யப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுக்கப் பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறியதாவது:
முன்னோர் தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான சான்றும், பொழுதுபோக்கில் ஈடுபட்டதற்கான சான்றும் அதிகளவில் கிடைத்து வருகின்றன. வளையல்களை அலங்காரம் செய்து, மெருகேற்றும் பணி நடந்து, மீண்டும் விற்பனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.
அதிகளவில் உடைந்த நிலையில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு முழுமையான வளையல் கிடைத்தது. தற்போது, மீண்டும் அலங்காரம் செய்த நிலையில், முழுமையான சங்கு வளையல் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.