ADDED : செப் 08, 2024 05:33 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில், அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்தது குறித்து விசாரித்த போலீஸ் ஏட்டை கண்டித்து பா.ஜ.,வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி,பா.ஜ., சார்பில், திண்டிவனத்தில் பல இடங்களில் போலீஸ் அனுமதி பெற்று, விநாயகர் சிலைகளை வைத்து பூஜை நடத்தப்பட்டது.
இந்நிலையில், திண்டிவனம், காமாட்சி அம்மன் கோவில் தெருவில், அனுமதியின்றி, விநாயகர் சிலை வைத்த பா.ஜ.,வினரிடம், நேற்று மாலை 5:30 மணிக்கு ரோந்து வந்த போலீஸ் ஏட்டு முருகன் விசாரித்தார். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏட்டு அவதுாறாக பேசியதாக கூறி, பா.ஜ., மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் பிரபு, மகளிரணி ராதிகா உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.