ADDED : ஜூன் 18, 2024 04:44 AM
வேலுார் : ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையை ஏற்க தயார் என, சசிகலா, பன்னீர்செல்வம் கூறினால், அதை பழனிசாமி பரிசீலிப்பார்,'' என, முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.
வேலுார் மாவட்டம் அணைக்கட்டில், அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் வீரமணி திறந்து வைத்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டது, அண்ணாமலை பாதயாத்திரை சென்றது, இவை மதவாதத்தை அதிகரிக்கச் செய்தன. அதனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., ஓரளவு கூடுதல் ஓட்டு பெற்றது. மேலும், தி.மு.க.,விற்கு எதிராகத்தான் மக்கள் பா.ஜ.,விற்கு அதிகளவில் ஓட்டளித்து உள்ளனர்.
இத்தேர்தலில், யார் பிரதமர் என்று நாங்கள் முன் நிறுத்தவில்லை. அதனால் தான், அதிகளவில் மக்கள் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்கவில்லை.
கடந்த காலங்களில் ஜெயலலிதா இறந்த பின், மத்தியில் இருந்த பா.ஜ., அரசை அனுசரித்து சென்றதால், தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததற்கு காரணம், ஈரோடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வினர் பொதுமக்களை பஸ்களில் சுற்றுலா அழைத்துச் சென்று மனமாற்றம் அடையச் செய்தனர். இதுபோன்று நடக்கும் என அறிந்து தான், அ.தி.மு.க., போட்டியிடாது என பழனிசாமி அறிவித்தார்.
பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வில் எந்த பிளவும் இல்லை. கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள், தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க.,விற்கு எதிராக பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோல்வி அடைந்த பின், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பழனிசாமி தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம் என சசிகலாவும், பன்னீர்செல்வமும் தெரிவித்தால், அதை பழனிசாமி பரிசீலனை செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.