ADDED : ஆக 13, 2024 11:01 PM
சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பணிகளை முறையாக முடிக்காத கட்டுமான நிறுவனத்துக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சோழிங்கநல்லுாரில், 'மாந்த்ரி சிக்நேச்சர் வில்லாஸ்' என்ற பெயரில் குடியிருப்பு திட்டத்தை, 'பாயன்ட் டெக்னாலஜிஸ்' நிறுவனம் செயல்படுத்துகிறது.
இதில், ஷர்மிலி பாச் நீல்சன் என்பவர் வீடு வாங்கினார். அதில், கட்டுமானப் பணிகளை முறையாக முடிக்காமல், பல்வேறு வசதிகள் அரைகுறையாக இருப்பது குறித்து, ஷர்மிலி பாச் நீல்சன், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஆணையம், அரைகுறையாக விடப்பட்ட வசதிகளை முறையாக முடித்துக் கொடுக்கவும், இத்திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யவும், 2023ல் உத்தரவிட்டது.
உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், இந்த வழக்கு ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆணைய பொறுப்பு தலைவர் சுனில்குமார் பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட கட்டுமான திட்டத்தை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்துக்கு பெறப்பட்ட பணி நிறைவு சான்றிதழை, ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இக்குடியிருப்பு பொது இடங்கள் பராமரிப்பு பொறுப்பை, வீடு ஒதுக்கீட்டாளர்கள் சங்கத்திடம், செப்டம்பர், 30க்குள் ஒப்படைக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் சட்ட விதிகளை மீறியதற்காக இந்நிறுவனத்துக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இத்தொகையை, செப்., 30க்குள் செலுத்த வேண்டும்.
மேலும், இந்த கட்டுமான நிறுவனம் மீது, கிரிமினல் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.