ADDED : ஜூலை 13, 2024 11:35 PM
சென்னை:ரயில்வேயில் நாடு முழுதும், 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பணியாற்றி வருகின்றனர். பல மண்டலங்களில் ஓட்டுனர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், பணிச்சுமை ஏற்படுகிறது.
எனவே, 'காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ரயில் விபத்துகளுக்கு, மனித தவறே முக்கியமான காரணம் என, ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் ஓட்டுனர்கள் சிலர் கூறியதாவது:
ஓட்டுனர்களின் பணி நேரம், 10 மணி நேரத்திற்கு மேல் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில், 14 மணிநேரம் உழைக்க வேண்டி உள்ளது. இதனால், பணிச்சுமை அதிகரித்து அவதிப்படுகிறோம். ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக இரவுப்பணி வழங்கப்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். போதிய ஓய்வு வழங்காததால், ஓட்டுனர்கள் சோர்வடைகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

