மஞ்சுவிரட்டு மாடு பிடிப்பதில் தகராறு; துாங்கிய அண்ணன், தம்பி கொலை
மஞ்சுவிரட்டு மாடு பிடிப்பதில் தகராறு; துாங்கிய அண்ணன், தம்பி கொலை
ADDED : ஜூலை 02, 2024 05:13 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பனங்குடியில் நடந்த மஞ்சு விரட்டில் மாடு பிடித்த பிரச்னை காரணமாக கொல்லங்குடி அருகே நேற்று முன்தினம் இரவு அண்ணன், தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகர் பகுதியை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா 24, சுபாஷ் 23. இவர்கள் இருவர், நண்பர்களான சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயல் ராஜேஷ் 19, சாத்தரசன் பட்டி நவீன் 19, கிளுவச்சி அஜய் 20 ஆகிய ஐந்து பேர் சேர்ந்து கொல்லங்குடி அருகே கல்லணை என்ற பகுதியில் தங்கி மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்தனர்.
கடந்த வாரம் சிவகங்கை அருகே பனங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் இவர்களது மாட்டை பங்கேற்க வைத்தனர். இந்த மாட்டை பிடிப்பதில் புதுப்பட்டியை சேர்ந்த சக்தி மகன் மதன் 20 மற்றும் அவரது நண்பர்களுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவு கல்லணை பகுதியில் ஜெயசூர்யா, சுபாஷ், ராஜேஷ், நவீன், அஜய் ஆகியோர் துாங்கி கொண்டிருந்தனர். நஇரவு 10:30 மணிக்கு மதன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் சேர்ந்து துாங்கி கொண்டிருந்த ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோரை தாக்கினர்.
மற்ற மூவரும் தப்பினர். காயமடைந்த ஜெயசூர்யா, சுபாஷ் இறந்தனர். தப்பிய ராஜேஷ், நவீன் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் இருவரின் உடலையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். மதன் உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.