ADDED : ஜூன் 26, 2024 08:06 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனை முன்பு பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன்குமார் 40, மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மோகன்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு மருத்துவமனைக்கு காரில் சென்றார். இரவு மருத்துவமனையின் இரண்டு பெரிய கேட்களில் ஒன்று பூட்டப்பட்டிருக்கும். மற்றொன்று திறந்திருக்கும்.
பூட்டிய கேட் முன்பு காரில் வந்த மோகன்குமார் இரவு காவலர்களை அவதூறாக பேசி திறக்கும்படி கூறினார். செக்யூரிட்டி ஆனந்தராஜ் திறந்துள்ள கேட் வழியாக வரும்படி கூறினார்.
அவரை டாக்டர் மோகன்குமார் தாக்கி அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் டாக்டரிடம் பேசினார். ஆனால் அவரையும் மோகன்குமார் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டார். செக்யூரிட்டி ஆனந்தராஜ் புகாரின்படி மோகன்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடரும் மோதல்: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆண்கள் விடுதியில் கடந்த மாதம் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது டாக்டர் - காவலர்கள் மோதல் நடந்துள்ளது.

