'நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவியுள்ளது' * உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து
'நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவியுள்ளது' * உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து
ADDED : மே 30, 2024 11:34 PM
மதுரை:கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் எஸ்.ஐ.,யாக இருந்தவர் சக்திவேல். அவரது மனைவி தெய்வநாயகி. இவர்கள் மீது, 1992 முதல் 1996 வரை வருமானத்துக்கு அதிகமாக 6.77 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துகள் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார், 2011ல் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கை திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை நிலுவையில் இருந்த போது சக்திவேல் இறந்தார். தெய்வநாயகிக்கு ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, 2017ல் உத்தரவிட்டது.
தண்டனையை ரத்து செய்யக்கோரி, தெய்வநாயகி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
லஞ்சம் வாங்கக் கூடாது என்பது வாழ்வின் தத்துவமாகும். லஞ்சம் வாங்குவோரின் குடும்பம் பாதிப்பை சந்திக்கும். தவறான வழியில் வந்த பணத்தை அனுபவித்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நாட்டில் ஊழல் கற்பனைக்கு எட்டாதளவுக்கு பரவியுள்ளது. வீடுகளிலிருந்து ஊழல் தொடங்குகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இளைஞர்களிடம் பேசியபோது, 'ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்க வேண்டும்' என குறிப்பிட்டார்.
மனுதாரர் தவறான முறையில் பெற்ற பணத்தில் வாழ்ந்துள்ளார். இதனால் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மனுதாரருக்கு தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டியதில்லை.
மனுதாரரை சிறையில் அடைக்கவும், அவர் சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.