ADDED : மார் 25, 2024 06:14 AM
கோவை, : ''நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும், தனிநபர் வருமானத்தில், 140வது இடத்தில் தான் உள்ளது,'' என, எச்.எம்.எஸ்., தொழிற்சங்க தேசிய தலைவர் ராஜாஸ்ரீதர் கூறினார்.
கோவையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் வேலை வாய்ப்பு, எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது.
ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக, இந்தியா வளர்ந்திருந்தாலும் கூட, தனிநபர் வருமானத்தில் உலகளவில், 140வது இடத்தில் தான் உள்ளோம்.
இப்போதைய அரசியல் சூழலில், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். அதாவது, 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியுள்ளனர்.
இதனால், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும்பிரதமர் தலைமையில், இந்திய தொழிலாளர் மாநாடு நடைபெற வேண்டும்.
ஆனால், 2015க்கு பின் நடைபெறவில்லை. இது, தொழிலாளர் உரிமைகளை முடக்கும் விதத்தில் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் ஓட்டளிக்க வேண்டுமென, தீர்மானம் நிறைவேற்றவுள்ளோம்.
தொழிலாளர்களுக்கு எதிராக எந்த ஆட்சி அமைந்தாலும், எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

