ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அனுமதி அளித்தது ஐகோர்ட்
ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அனுமதி அளித்தது ஐகோர்ட்
ADDED : ஆக 21, 2024 09:48 PM
சென்னை:வங்கதேசத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிந்து முன்னணி அமைப்பின் சென்னை நகர செயலர் சிவா விஜயன் தாக்கல் செய்த மனு:
வங்கதேசத்தில், ஆட்சி கலைப்பை தொடர்ந்து, அங்குள்ள ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன; இதில், பலர் உயிரிழந்துள்ளனர். பெண்களை, பாலியல் வன்முறை செய்துள்ளனர். கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புக் குரல் எழும்பவில்லை.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவானது. சென்னை உள்பட தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. மனுக்களை நிராகரித்து விட்டனர். அதை ரத்து செய்து, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உதயகுமார், ''வங்கதேசத்தில், தற்போது நிலைமை சீராகி விட்டது. போராட்டம் நடத்த தேவையில்லை,'' என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், ''ஹிந்துக்கள் தாக்கப்படுவது, கோவில்கள் இடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன,'' என்றார்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீசாரின் உத்தரவை ரத்து செய்து, வரும் 27ம் தேதி மாலை, 3:00 முதல் 4:00 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார். போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, போராட்டத்தை நடத்தும்படி, நீதிபதி அறிவுறுத்தினார்.