அமைச்சர் மீதான ஈ.டி., வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
அமைச்சர் மீதான ஈ.டி., வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஆக 07, 2024 10:44 PM
சென்னை:அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்ய கோரி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வருமானத்துக்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, 2006ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, துாத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. அவரது சொத்துக்களை முடக்கியது. அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்யவும், சொத்து முடக்கத்துக்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்திருந்தது.
இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகினர். 'வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது' என, அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய மறுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
***