குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் சி.பி.சி.ஐ.டி., அறிக்கை தர அவகாசம் உயர் நீதிமன்றம் அனுமதி
குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் சி.பி.சி.ஐ.டி., அறிக்கை தர அவகாசம் உயர் நீதிமன்றம் அனுமதி
ADDED : ஜூன் 06, 2024 08:56 PM
மதுரை:புதுக்கோட்டை மாவட்ட கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை அவகாசம் அளித்தது.
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. வன்னியன்விடுதி, அரையபட்டி, வேம்பன்பட்டி, வீரடிபட்டி, இலைக்காடிவிடுதி, பல்லவராயன்பட்டியின் சில டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள திருமண மண்டபங்களில் குறிப்பிட்ட சமூக மக்கள் நுழைய மற்றும் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். கூத்தங்குடி வைராண்டி கண்மாயை குறிப்பிட்ட சமூக மக்கள் பயன்படுத்த அனுமதிக்க, தமிழக உள்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
குடிநீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
மே 15ல் நீதிபதிகள் அமர்வு, மனுதாரரின் புகார்கள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு முன் மீண்டும் நேற்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
நீதிபதிகள், 'ஜூன் 24ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.