குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்; சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவு
குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்; சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவு
ADDED : மே 16, 2024 05:52 AM

மதுரை : புதுக்கோட்டை மாவட்ட கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது, டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறை விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனு: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி கிராம குடிநீர் தொட்டியில் ஏப்.,25 ல் மாட்டு சாணம் கலக்கப்பட்டது. போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. மாவட்டத்தில் பல கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது.
குடிநீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதை பருகியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வன்னியன்விடுதி, அரையபட்டி, வேம்பன்பட்டி, வீரடிபட்டி, இலைக்காடிவிடுதி, பல்லவராயன்பட்டியின் சில டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள திருமண மண்டபங்களில் குறிப்பிட்ட சமூக மக்கள் நுழைய மற்றும் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். கூத்தங்குடி வைராண்டி கண்மாயை குறிப்பிட்ட சமூக மக்கள் பயன்படுத்த அனுமதிக்க நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை முதன்மை செயலர், ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: இரட்டைக் குவளை முறையை பின்பற்றிய 5 கடைகள் மூடப்பட்டுள்ளன. சங்கம்விடுதி குடிநீர் தொட்டி அனைத்து மக்களுக்கும் பொதுவானது. பாசி படர்ந்திருந்தது. சாணம் கலக்கப்படவில்லை. இது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சாணம் கலக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தவறான கருத்து பரவியது. பின் நீக்கப்பட்டது. அங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
திருமண மண்டபங்கள் மற்றும் வைராண்டி கண்மாயை பயன்படுத்த தடுக்கப்படுவதாக யாரும் புகார் அளிக்கவில்லை. இரட்டைக் குவளைமுறை நடைமுறையில் இல்லை. இவ்வாறு தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு எதிராக பொய் வழக்கு பதியப்படுகிறது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். போலீசார், வருவாய்த்துறை முறையாக விசாரிப்பதில்லை. அரசு அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் அறிக்கையை நீதிமன்றம் ஏற்க வேண்டிய அவசியமில்லை. இரட்டைக்குவளைமுறை சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது, இரட்டைக்குவளை முறை, திருமண மண்டபங்கள் மற்றும் கண்மாயை பயன்படுத்த குறிப்பிட்ட சமூக மக்களை தடுக்கும் புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்க வேண்டும். ஜூன் 4 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.