அமைச்சர் சொத்து வழக்கில் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., யிடம் குறுக்கு விசாரணை
அமைச்சர் சொத்து வழக்கில் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., யிடம் குறுக்கு விசாரணை
ADDED : ஆக 07, 2024 09:55 PM
துாத்துக்குடி:தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006 ல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை துாத்துக்குடி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி அய்யப்பன் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆஜராகவில்லை. அமைச்சரின் மகன்கள் அனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், மற்றும் அவரது தம்பிகள் சண்முகானந்தன், சிவானந்தன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கு பதிவு செய்யப்படும்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி.யாக இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள பெருமாள்சாமியிடம் குறுக்குவிசாரணை நடந்தது.
அவரிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் சுமார் இரண்டு மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி அய்யப்பன் உத்தரவு பிறப்பித்தார்.