கள்ளச்சாராயத்தை விட விலை குறைந்த கஞ்சா தள்ளாட்டத்தின் உச்சியில் கடலுார் மாவட்டம்
கள்ளச்சாராயத்தை விட விலை குறைந்த கஞ்சா தள்ளாட்டத்தின் உச்சியில் கடலுார் மாவட்டம்
ADDED : பிப் 27, 2025 11:37 PM
கடலுார்,:கடலுார் மாவட்டத்தில் கள்ளச்சாராய வழக்குகள் வெகுவாகக் குறைந்த நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதை வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
கடலுார் மாவட்டம், புதுச்சேரிக்கு அருகில் உள்ளது. கடலுார் டாஸ்மாக்கில் கிடைக்காத சரக்குகள் புதுச்சேரியில் கிடைக்கின்றன. இதனால், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தல் அதிகரித்தது.
இதற்கு முன் கடலுார் எஸ்.பி.,யாக இருந்த ராஜாராம், புதுச்சேரி, கடலுார் மாவட்டம் இணைந்து நடத்திய கூட்டத்தில், புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் தரப்பில், இங்கு தயாரிக்கப்படும் சரக்குகளில், 35 சதவீதம் புதுச்சேரி வாசிகளுக்கு போதுமானது.
மீதியுள்ள மதுபாட்டிகள் எல்லாம் புதுச்சேரியில் இருந்துகடத்தப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.
அப்போது, மதுப்பிரியர்கள் அதிகளவில் இருந்தனர். தற்போது அதையும் விஞ்சும் அளவிற்கு, 'கஞ்சா' குட்கா, மெத்ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.
இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது இல்லாமல் போனது.
இதனால், ஊறல், கள்ளச்சாராய வழக்குகள் பதிவாவதில்லை. காரணம் மிகக் குறைந்த செலவில், நிறைந்த போதை தரக்கூடிய கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர்.
கடலுார் மாவட்ட தற்போதைய எஸ்.பி., ஜெயகுமாரின் அதிரடி உத்தரவால், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.
கடலுாரில் நேற்று கலால் போலீசாரின் தீவிர சோதனையில், நான்கு இளைஞர்கள் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் புவனகிரியில் ஐந்து பேர், கடந்த 19ம் தேதி காட்டுமன்னார்கோவில் அருகே நான்கு பேர், கடந்த ஜன., 1ம் தேதி அண்ணாமலை நகரில் ஆறு பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வழக்கில் செய்யப்படுபவர்கள், 19 முதல் 25 வயது இளைஞர்கள் தான். மேலும், சிலர் 19 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும் கஞ்சா பயன்படுத்தத் துவங்கி, சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
'மாவட்டம் முழுதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் வியாபித்துள்ளது என்பது, இந்த வழக்குகளில் இருந்தே தெரிகிறது.
இதற்கு காரணம், மதுவை விட கஞ்சா விலை மலிவு; கஞ்சாவை பயன்படுத்துவதால், தடையின்றி வாகனம் ஓட்டிச் செல்லலாம்.
'ஒருமுறை பயன்படுத்திவிட்டால், நீண்ட நேரம் வரை போதை, ஒரே மாதிரியாக இருக்கும். வீட்டிற்குள்ளேயே இதை பயன்படுத்தலாம். இதனால்தான் இளைஞர்கள் இதை நாடிச் செல்கின்றனர்.
'இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள், எதையும் துணிச்சலாக செய்யும் மனநிலைக்கு வந்து விடுகின்றனர். இதன் காரணமாக தான் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது சகஜமாகி விடுகிறது.
'இந்நிலையை உடனடியாக தடுக்க அரசு முயற்சி மேற்கொண்டால்தான், இளைய சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்' என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.