நீலகிரியில் வரலாறு காணாத வறட்சியால் அணைகள் வறண்டன
நீலகிரியில் வரலாறு காணாத வறட்சியால் அணைகள் வறண்டன
UPDATED : ஏப் 28, 2024 02:43 PM
ADDED : ஏப் 28, 2024 12:57 AM

ஊட்டி: நீலகிரியில் வரலாறு காணாத வறட்சியால் அணைகள் வறண்டு, மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாமல் மின் வாரியம் திணறி வருகிறது.
நீலகிரியில், முக்குறுத்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு,
குந்தா, கெத்தை, பில்லுார் ஆகிய, 13 அணைகள் உள்ளன. அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்தாண்டில் பருவ மழை பொய்த்தது. நடப்பாண்டில் இது வரை மழை பெய்யவில்லை. அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால் அணைகள் வறண்டு மைதானம் போல் காட்சியளிக்கின்றன.
மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகள் மழையின்றி வறண்டு மைதானம் போல் காட்சியளிக்கின்றன. பிற அணைகளிலும் தண்ணீர் அளவு சரிந்துள்ளது.
இதனால், காட்டுக்குப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், முக்குறுத்தி மின் நிலையம், ஆகிய மின்நிலையங்களில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பிற மின்நிலையங்கள் மூலம், தினசரி, 150 முதல் 200 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உற்பத்தி குறைந்ததால் ஈரோடு, மதுரை மற்றும் சென்னைக்கு போதிய அளவில் மின்சாரம் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டில் பருவ மழை பொய்த்தது. நடப்பாண்டில் கோடை மழை இதுவரை பெய்யவில்லை. பெரும்பாலான அணைகள் வறண்டதால், 7 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பிற மின் நிலையங்கள் மூலம் 'பீக்' ஹவர்ஸ் மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்' என்றனர்.

