மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
ADDED : ஜூலை 02, 2024 05:46 AM
கரூர் : கரூர் அருகே, தொழில் அதிபரிடம் நிலத்தை எழுதி தரும்படி மிரட்டிய புகாரில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 50; நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில் எலக்ட்ரிகல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், அவரது தம்பி முன்னாள் பஞ்., தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் தோரணகல்பட்டி, குன்னம்பட்டியில் உள்ள 22 ஏக்கர் நிலத்தை எழுதி தரும்படி மிரட்டியதாகவும், தன்னிடம் கடனாக வாங்கிய, 10 கோடி ரூபாய் மற்றும் வட்டியை திருப்பி தர கேட்டபோது மிரட்டியதாகவும், கடந்த மாதம் 22ல் வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வாங்கல் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உட்பட பலர் மீது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் கிரையம் செய்து கொண்டதாக, யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகார் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்ய விடாமல் இருக்க, முன் ஜாமின் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 25ல் தள்ளுபடி செய்தது. இதனால் விஜயபாஸ்கர், 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், எலக்ட்ரிக்கல் நிறுவன அதிபர் பிரகாஷ் கொடுத்த புகாரை அடுத்து வாங்கல் போலீசார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுவது, அ.தி.மு.க., வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.