ADDED : மார் 31, 2024 03:08 AM
'எங்கும் ஹிந்தி, எதிலும் ஹிந்தி என ஏமாற்றியது தான், மோடி அரசின் அவலச்சாதனை' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைதளப்பதிவு:
நேற்று முன்தினம் மாலை செய்தி, தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. நேற்று காலை செய்தி அழகிய தமிழ்ச்சொல், 'வானொலி' ஆக இருக்க, ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.
மோடியின் கண்ணீரை, அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவர். கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்.
ஆனால், மோடியின் கண்ணீர். ஒரு பக்கம் கண்ணை குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப்பாசம்.
கடந்த காலங்களில், தமிழகத்தில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர், இப்போது ஹிந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன.
பிரதமர் மோடி, கருப்பு பணம் மீட்பு; மீனவர்கள் பாதுகாப்பு; 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு; ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்று தான் அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு.
விமானங்களில் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூட, தமிழிலோ, ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்பு படையினர் இல்லை. எங்கும் ஹிந்தி, எதிலும் ஹிந்தி என மாற்றியது தான் மோடி அரசின் அவலச்சாதனை. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு, ஏமாற்றமே பரிசாகும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

