ADDED : ஏப் 30, 2024 03:38 AM
சென்னை : கோவை லோக்சபா தொகுதியில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களின் பெயர்களை சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க கோரிய வழக்கை, இன்று விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
கோவை நஞ்சுண்டபுரத்தைச் சேர்ந்தவர் சுதந்திர கண்ணன்; ஆஸ்திரேலியா வில் மருத்துவராக பணிபுரிகிறார். லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு செய்வதற்காக கோவை வந்தார்.
வாக்காளர் பட்டியலில் அவரது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது மகள் பெயர் உள்ளது.
இதையடுத்து, தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களில் ஆயிரக்கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும், விதிகளை முறையாக பின்பற்றாமல் நீக்கி உள்ளனர் என்பதால், நீக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கவும், அதுவரை கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் சுதந்திர கண்ணன், மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், சுதந்திர கண்ணன் தரப்பில், அவரது வழக்கறிஞர் மதன்ராஜ் முறையிட்டார்.
மனுவை, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

