ADDED : மே 03, 2024 10:06 PM
சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிவடைந்ததால், தேர்தல் விதிகளை முழுதுமாக திரும்ப பெறுமாறு தேர்தல் ஆணையருக்கு, கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ், தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடந்த ஏப்., 19ம் தேதி வரை தேர்தல் நடைமுறைகள் இருந்தன. தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் என்பது, மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்.
நடத்தை விதியால், நாங்கள் தமிழக அரசிடம் புதிய கோரிக்கைகளை முன்வைக்கவோ, பிரச்னைகளை மக்கள் பிரநிதிகள் வாயிலாக, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவோ முடியவில்லை.
அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிடவும் முடியவில்லை. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். இந்த விபரத்தை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் உடனே தெரிவித்து, தமிழக அரசு இயந்திரம் முழுதுமாக செயல்பட தேர்தல் நடத்தை விதிகளை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.