ADDED : ஏப் 08, 2024 06:16 AM
சென்னை : சமூக வலைதளத்தில் அமைச்சர் உதயநிதி வழங்கிய ஈ.வெ.ரா., சிலைக்கு பதில், ஆபாச சிலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நபரின் முன்ஜாமின் மனுவை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜூபேர். சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து, உண்மையான செய்திகளை தன் இணையதளத்தில் வெளியிட்டு வரும் இவர், நிகழாண்டுக்கான, 'கோட்டை அமீர் மத நல்லிணக்க' விருது பெற்றார்.
விருது பெற்ற முகமது ஜூபேருக்கு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்து, அவருக்கு ஈ.வெ.ரா., சிலையை பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்நிலையில், அமைச்சர் வழங்கிய பெரியார் சிலைக்கு பதிலாக, ஆபாச சிலை இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ், சந்தன்குமார் என்பவர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சந்தன்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, ''மனுதாரரை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, முன்ஜாமின் வழங்கக் கூடாது,'' என்றார்.
அதை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

