ADDED : ஏப் 12, 2024 08:42 PM
சென்னை:'கோவையில் தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் இடங்களில் எல்லாம், பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி வருகிறது;இதை பொறுக்க முடியாத தி.மு.க.,வினர் பொய் புகார் அளித்துள்ளனர்' என,பா.ஜ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:
கோவையில் போட்டியிடும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு, தொகுதி மக்களிடம் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அவர் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதுவரை, தி.மு.க., வுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அண்ணாமலையை காணவும், அவருக்கு ஆதரவாகவும் அதிகம் பேர் திரண்டு வருகின்றனர்.
இதை, தி.மு.க.,வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கோவை ஆரம்பாளையத்தில் அண்ணாமலை உரிய அனுமதியுடன், 11ம் தேதி இரவு விதிகளுக்கு உட்பட்டு பிரசாரம் செய்தார். அங்கு, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அதிக மக்கள் கூடினர். இதை, தி.மு.க.,வினரே எதிர்பார்க்கவில்லை.
அண்ணாமலைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க.,வினர், பா.ஜ.,வினர் கலவரம் செய்ய முயலுவதாகக் கூறி, எங்கள் கட்சியினர் மீது பொய் புகார் அளித்துள்ளனர்.
பா.ஜ.,வில் கலவரம் செய்பவர்கள் யாரும் இல்லை. போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும், பா.ஜ.,வின் தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

