டி.ஜி.பி., நிபந்தனையை பின்பற்ற அவசியமில்லை மாட்டு வண்டி பந்தய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
டி.ஜி.பி., நிபந்தனையை பின்பற்ற அவசியமில்லை மாட்டு வண்டி பந்தய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 25, 2024 02:34 AM
மதுரை:'மாட்டு வண்டி பந்தயத்திற்கு நிபந்தனைகள் விதித்து டி.ஜி.பி., பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்றத் தேவையில்லை. பழைய நடைமுறையை பின்பற்றி அனுமதி வழங்கலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.பாரம்பரிய வீரவிளையாட்டு மாட்டு வண்டி காளைகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பாரம்பரிய பழக்க, வழக்கங்களின் வரலாறு, சமூக, கலாசார முக்கியத்துவத்தை உணர்த்த மாட்டு வண்டி பந்தயங்கள் நடக்கின்றன. இதற்கு அனுமதி வழங்க நிபந்தனைகள் விதித்து தமிழக டி.ஜி.பி., மார்ச் 7ல் சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி, தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் பந்தயம் நடத்தக்கூடாது. கிராம சாலைகள் அல்லது காலி மைதானம் அல்லது மண் பாதையில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிபந்தனைகள் ஏற்புடையதல்ல. நெடுஞ்சாலைகளில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த எவ்வித தடையையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை.டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மாட்டு வண்டி பந்தயம், ரேக்ளா ரேஸ், குதிரை பந்தயத்திற்கு அனுமதி கோரி யாரும் விண்ணப்பித்தால் பழைய நடைமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் அனுமதிக்கலாம்.
டி.ஜி.பி., பிறப்பித்த சுற்றறிக்கையிலுள்ள நிபந்தனைகளை பின்பற்றத் தேவையில்லை. தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., ஜூன் 18ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

