ADDED : ஆக 22, 2024 02:23 AM
கிருஷ்ணகிரி:மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ள போலி என்.சி.சி., மாஸ்டரின் குற்றப்பட்டியல் அசர வைக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக இருந்த சிவராமன், 35, கடந்த 17ல் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் மற்றும் பண மோசடி புகார்கள் வெளியான நிலையில், இவர் என்.சி.சி., மாஸ்டர், அரசியல்வாதி, வழக்கறிஞர், தமிழின போராளி, பெண்களின் காவலர், கட்ட பஞ்சாயத்து தலைவர் என பல வேடங்களில் ஏராளமான தில்லுமுல்லுகளை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட செயலராக இருந்த சிவராமன், விசிட்டிங் கார்டில் பி.ஏ.,- எல்.எல்.பி., என போட்டு போலி வக்கீலாக நிலப்பிரச்னையை தீர்ப்பதாக கூறி, பண மோசடி செய்துள்ளார்
பள்ளியில் என்.சி.சி., படை மாணவனாக இருந்ததை வைத்து, தான் ராணுவ பயிற்சி பெற்ற என்.சி.சி., ஆபீசர் என்று கூறி, போலி ஆவணங்களை காட்டி பள்ளி, கல்லுாரி நிர்வாகிகளை ஏமாற்றியுள்ளார்
தன்னை நம்பி முகாமில் பங்கேற்ற மாணவியரிடம் பாலியல் குற்றங்கள் புரிந்துள்ளார்
போலீசாரை வீரப்பன் சுட்டார். அதற்கு காரணம், எங்கள் பெண்கள் மீது போலீசார் கை வைத்தது தான் என கூட்டங்களில் பேசி, பெண்களின் காவலராக தன்னை காட்டிக் கொண்டு உலா வந்துள்ளார்
ஹிந்தி, ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்த கடைக்காரர்களிடம் தமிழில் பலகை வைக்கச் சொல்லி தகராறு செய்துள்ளார்
என்.சி.சி., அலுவலர், வழக்கறிஞர், நீதிமன்ற ஆணை, வங்கி சலான் என, பல போலி ஆவணங்களை தயாரித்துள்ளார்
சென்னையில் அரசு வட்டார செல்வாக்கு இருப்பதாக சொல்லி, போலீஸ் அதிகாரிகளையே ஏமாற்றி ஸ்டேஷன்களில் கட்ட பஞ்சாயத்து செய்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கூறி வசூல் வேட்டை, கிரானைட் அதிபர்களிடம் மிரட்டல் வசூல் என இவரது குற்றப்பட்டியல் நீள்கிறது.
'பல பள்ளிகளில் இவர் என்.சி.சி., முகாம் நடத்தியதாக கூறப்பட்டாலும், யாரும் புகார் தரவில்லை. மாணவியர் தங்களுக்கு தெரிந்த தகவல்களை தைரியமாக சொல்லலாம். அவர்களது தகவல்கள் ரகசியம் காக்கப்படும்' என போலீசார் கூறினர்.