'நம்ம ஏஜன்ட் கூட ஓட்டு போடலியா?' குமரி நிர்வாகிகளிடம் பழனிசாமி குமுறல்
'நம்ம ஏஜன்ட் கூட ஓட்டு போடலியா?' குமரி நிர்வாகிகளிடம் பழனிசாமி குமுறல்
ADDED : ஜூலை 20, 2024 02:20 AM
சென்னை : கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியை விட, குறைவான ஓட்டுகள் பெற்றது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், பொதுச்செயலர் பழனிசாமி கவலை தெரிவித்துள்ளார்.
லோக்சபா பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளுடன், பொதுச்செயலர் பழனிசாமி, கடந்த 10ம் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பரஸ்பர குற்றச்சாட்டு
நேற்று காலை விழுப்புரம், கன்னியாகுமரி தொகுதிகளுக்கும், மாலையில் தர்மபுரி தொகுதிக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் நிர்வாகிகளிடம், 'உள்ளூர் பிரச்னை, கட்சி பிரச்னை எதுவாக இருந்தாலும், தலைமையின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, இப்போதிருந்தே பணியாற்றுங்கள்' என, பழனிசாமி அறிவுரை கூறினார்.
கன்னியாகுமரி ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து, அந்த மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், நாம் தமிழர் கட்சியை விட குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளோம். விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், நாம் தமிழர் கட்சிகளை விட குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளன. விளவங்கோடு தொகுதியில், ஒரு ஓட்டுச்சாவடியில் அ.தி.மு.க.,வுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. அந்த ஓட்டுச்சாவடியில் இருந்த கட்சி முகவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா என, பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இரு கட்சிக்கும் ஓட்டு
அப்போது, ஒரு தரப்பினர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக, புகார் தெரிவித்தனர்.
மேலும் மாவட்டச்செயலர்கள் குறித்து குற்றச்சாட்டுகளை கூறத் துவங்கியதும், அவர்களை பழனிசாமி தடுத்து விட்டார்.
கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை, மோடியா, ராகுலா என்ற போட்டி ஏற்பட்டதால், மக்கள் இரு கட்சிக்கும் ஓட்டளித்துள்ளனர் எனக் கூறி, மாவட்டச்செயலர்கள் சமாளித்து விட்டனர்.
இவ்வாறு கூறினர்.

