5ம் வகுப்பு வரை 'அனிமேஷன்' பாடம் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு
5ம் வகுப்பு வரை 'அனிமேஷன்' பாடம் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு
ADDED : ஏப் 16, 2024 08:42 PM
சென்னை:வரும் கல்வி ஆண்டில்இருந்து, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'அனிமேஷன் வீடியோ' பாடங்களை நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ், தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், 'ஸ்மார்ட் கிளாஸ்' என்ற நவீன டிஜிட்டல் வழி வகுப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதற்காக, மத்திய அரசின் நிதியில் கிராமப்புற பள்ளிகளிலும், ஆன்லைன் இணையதள இணைப்புகள் பெறப்படுகின்றன.
இந்த பணிகள் வரும் ஜூனுக்குள் நிறைவு பெற்று விடும் நிலையில், புதிய கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு டிஜிட்டல் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனிமேஷன் வகை வீடியோக்களை பாடங்களாக நடத்துவதற்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மணற்கேணி என்ற செயலியில், இந்த வீடியோ பாடங்கள் உள்ளதாகவும், அவற்றை பதிவிறக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

