வண்டல் மண் எடுக்க வழங்கப்படும் பர்மிட்டில் பாரபட்சம்
வண்டல் மண் எடுக்க வழங்கப்படும் பர்மிட்டில் பாரபட்சம்
ADDED : ஜூலை 04, 2024 05:25 AM

மேட்டுப்பாளையம் : பவானிசாகர் அணையில் இருந்து மண் எடுக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் பர்மிட்டில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், ஆளுங்கட்சியினர் தலையீடு உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம், 105 அடியாகும். தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 70 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில், அதிக அளவில் வண்டல் மண் படிந்துள்ளன.
இந்த வண்டல் மண்ணை எடுக்க, விவசாயிகளுக்கு அரசு அனுமதி உள்ளது. கடந்த ஒரு மாதமாக வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் பர்மிட்களுக்கு வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் அதிக பாரபட்சம் காட்டுவதாகவும், மிகவும் காலதாமதம் செய்வதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பவானிசாகர் நீர்பாசன சங்க உறுப்பினர், விவசாயி முருகேசன் கூறியதாவது:-
சிறுமுகை, லிங்காபுரம், பெத்திக்குட்டை, பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள பகுதிகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த வண்டல் மண் தேவைப்படுகிறது. தற்போது சுமார் 1500 விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றனர்.ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 12 லோடு வண்டல் மண் தேவைப்படும்.
ஒரு ஏக்கருக்கு 7 லோடு மண் தான் அனுமதிக்கப்படுகிறது. விவசாயிகள் கொண்டு வரும் லாரிகள் பழுதாகி நின்று லோடுகள் எடுக்க முடியாமல் போனால், மீண்டும் லாரியை சரி செய்து எடுக்க வந்தால், பர்மிட் நாள் முடிந்தது, எடுக்க அனுமதி இல்லை என அதிகாரிகள் கறார் காட்டுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் ஆளுங்கட்சியினர் தலையீடு தான். அவர்கள் சொல்லும் நபர்களுக்கு பர்மிட் உடனடியாக வழங்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதில் இரண்டு மாதம் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்னும் 10 நாட்களுக்குள் மண் எடுக்காவிட்டால், இனி மண் எடுக்க பல வருடங்கள் ஆகலாம். விவசாயிகளுக்கு விண்ணப்பித்த உடன் அனுமதி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், 'அனைத்து விவசாயிகளுக்கும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
சமர்பிக்கும் ஆவணங்களில் குறைகள் இருந்தால் அந்த குறிப்பிட்ட ஆவணங்களை தர கோருகிறோம். பாரபட்சமோ, காலதாமதமோ செய்யப்படுவது இல்லை,' என்றனர்.