தியாகி கணக்கில் பென்ஷன் பாக்கி அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
தியாகி கணக்கில் பென்ஷன் பாக்கி அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
ADDED : ஜூலை 09, 2024 04:13 AM

சென்னை : பென்ஷன் பாக்கி தொகையான, 15.31 லட்சம் ரூபாயை, 97 வயதான சுதந்திர போராட்ட தியாகியின் வங்கி கணக்கில் செலுத்தியதை தொடர்ந்து, அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலு, 97; சுதந்திர போராட்ட தியாகி. கடந்த 2021 முதல், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் பெற்று வருகிறார். தனக்கு, 1987ல் இருந்து பென்ஷன் பாக்கித்தொகை கோரி, உயர் நீதிமன்றத்தில், தியாகி வேலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. கடந்த, 1987ல் விண்ணப்பித்ததற்கு எந்த ஆதாரம் இல்லை; ஆனால், 2008 டிசம்பரில் இவர் விண்ணப்பம் அனுப்பியது பற்றி, அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, 2008 முதல் 2021 வரையிலான நாட்களுக்கு, பென்ஷன் பாக்கியை கணக்கிட்டு வழங்கும்படி, பொதுத்துறை அதிகாரிக்கு, 2022 ஏப்ரலில், நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, கடந்த ஆண்டு ஜூனில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, பென்ஷன் பாக்கி வழங்கப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தியாகி வேலு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பொதுத்துறை கூடுதல் செயலர் ஆஜராக, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பென்ஷன் பாக்கியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதித்து, பிடிவாரன்ட் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், அவமதிப்பு வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பொதுத்துறை அதிகாரி சாந்தி நேரில் ஆஜரானார்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, “நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டது. மனுதாரரின் வங்கி கணக்கில், 15.31 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு விட்டது,” என்றார்.
உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதால், அவமதிப்பு வழக்கு விசாரணையை, நீதிபதி முடித்து வைத்தார்.

