தேடப்படும் நபர்களுக்கு உதவி அகதி முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
தேடப்படும் நபர்களுக்கு உதவி அகதி முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 12, 2024 11:38 PM

மதுரை, : இலங்கையில் தேடப்படும் குற்றவாளிகள் இருவர், இந்தியாவில் சட்ட விரோதமாக படகு மூலம் நுழைய மற்றும் பாஸ்போர்ட் பெற உதவிய வழக்கில், இலங்கை அகதியின் முன்ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று தள்ளுபடி செய்தது.
செந்துாரன் என்பவர் இலங்கை அகதி. இவர் மீது, இலங்கையை சேர்ந்த இரண்டு குற்றவாளிகள், சட்ட விரோதமாக படகு மூலம் இந்தியாவிற்குள் நுழைய மற்றும் இந்திய பாஸ்போர்ட்டுகளைப் பெற உதவியதாக, சிவகங்கை கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். செந்துாரன் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி: இலங்கையை சேர்ந்த இருவர் மீது அந்நாட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இலங்கை அரசு அவர்களை தேடி வருகிறது. இவர்களுக்கு சென்னை முகவரியில் ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்களை பெற்றுத் தர மனுதாரர் உதவியுள்ளார்.
இருவரும் சட்ட விரோதமாக படகு மூலம் ராமேஸ்வரம் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களை மனுதாரர் அழைத்துச் சென்றுள்ளார்.
மனுதாரருக்கு ஏற்கனவே இந்த நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் அனுமதித்தது. அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. குற்றச்சாட்டின் தன்மை, விசாரணையின் நிலையை கருதி, ஏற்கனவே மனுதாரரின் முன்ஜாமின் மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தற்போது சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

