மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றம் அரசு ஒப்பந்த பணியாளர்கள் குமுறல்
மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றம் அரசு ஒப்பந்த பணியாளர்கள் குமுறல்
ADDED : ஆக 07, 2024 02:01 AM
சென்னை:ஊரக வளர்ச்சித் துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், வறுமை ஒழிப்புக்கான திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், 2012 - 13ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக அனைத்து ஒன்றியங்களிலும், வட்டார அளவில், மேலாளர், ஒருங்கிணைப்பாளர், மாவட்ட அளவில் உதவி திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.
மாவட்ட அளவில் பணியாற்றும், உதவி திட்ட அலுவலர்களுக்கு, மாத சம்பளமாக 35,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பி.எப்., பிடித்தம் எதுவும் இல்லை. விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது.
இவர்கள் முதல்வரின் காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாழ்வாதார மேம்பாடு, அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை சரிபார்த்தல், தொகுப்பு வீடு கணக்கெடுப்பு, மாற்றுத்திறனாளிகள் நலம், பழங்குடியினர் மேம்பாடு, வெள்ள நிவாரண கணக்கெடுப்பு என, பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
இம்மாதம் முதல் தேதி, உதவி திட்ட அலுவலர்கள், 50 பேர் மாவட்டம் விட்டு மாவட்டம், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலுாரில் பணியாற்றியவர் நாகப்பட்டினத்திற்கும், கோவையில் பணியாற்றியவர் தேனிக்கும், கடலுாரில் பணியாற்றியவர் ஈரோட்டுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிவோரை மாற்ற வேண்டும் என்பதற்காக, இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒப்பந்த ஊதியத்தில் பணியாற்றும் தங்களை இடமாற்றம் செய்தது, அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
அரசு துறைகளில் பலவற்றில் ஊழியர்கள் ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் எங்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்து உள்ளனர்.
சம்பளம் தவிர எந்த படியும் கிடையாது. குடும்பத்தினரை விட்டுவிட்டு, குறைந்த சம்பளத்தில், வெளிமாவட்டங்களுக்கு சென்று பணிபுரிவது சிரமம்.
தற்போது வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டம் என்றால்கூட பரவாயில்லை. ஒவ்வொருவரையும், 300 முதல் 450 கி.மீ., துாரமுள்ள மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வைத்து இடமாற்றம் செய்வதுபோல், எங்களுக்கும் செய்திருந்தால்கூட பரவாயில்லை. அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு இடமாற்றம் செய்து உள்ளனர்.
இதை துறை அமைச்சர் உதயநிதியும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.