பரவலாக பெய்த மழை எதிரொலி: தீபாவளி விடுமுறையிலும் குறைந்தது மின் தேவை!
பரவலாக பெய்த மழை எதிரொலி: தீபாவளி விடுமுறையிலும் குறைந்தது மின் தேவை!
ADDED : நவ 02, 2024 11:18 AM

சென்னை: மாநிலத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக, தீபாவளி தொடர் விடுமுறை இருந்தபோதும், தமிழகத்தில் மின் தேவை, 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தது.
தமிழகத்தில் தினசரி மின்தேவை, 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இந்த அளவு குளிர்காலத்தில், 10 ஆயிரம் மெகாவாட் ஆகவும், கோடை காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் ஆகவும் இருக்கும். கடும் வெயிலால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின்தேவை 20,830 மெகாவாட் ஆக அதிகரித்தது. இதுவே உச்சபட்ச அளவாகும்.
தமிழகத்தில் அக்., மாதம் வடகிழக்குப் பருவமழை துவங்கினாலும், செப்., மாதத்திலேயே பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், அந்த மாதம் மின்நுகர்வு வழக்கத்தைவிட குறையும். ஆனால், இந்த ஆண்டு செப்., மாதம் எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை காலத்தைப் போல் வெயில் சுட்டெரித்தது. அதன் காரணமாக, தினசரி மின்தேவை 17,500 மெகாவாட் வரை அதிகரித்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படவில்லை. இதனால், தினசரி மின்தேவை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளன்று தமிழகத்தில் தினசரி மின்தேவை, 16 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. இது நேற்று, 5 ஆயிரம் மெகாவாட் குறைந்து, 11 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்தது.
கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் விடுமுறை போலவே, மாநிலம் முழுவதும் பரவலாக பெய்த மழையும் மின் தேவை சரிவுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் மின் வாரிய அதிகாரிகள்.

