தி.மு.க., -- எம்.பி., ஜெகத்ரட்சகன் மீதான வழக்கை நடத்த அனுமதி
தி.மு.க., -- எம்.பி., ஜெகத்ரட்சகன் மீதான வழக்கை நடத்த அனுமதி
ADDED : ஜூலை 24, 2024 09:05 PM
சென்னை:வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு, அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, 'சில்வர் பார்க்' என்ற நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் 32.69 கோடி ரூபாய்க்கு ஜெகத்ரட்சகன் வாங்கி, அவற்றை தன் மனைவி, மகன்களுக்கு மாற்றம் செய்ததாகவும், இதில் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும், அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது.
ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் சில முடக்கப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து, சுங்கத்துறை ஆணையர் நடத்திய விசாரணையில், சில்வர் பார்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு, ஜெகத்ரட்சகனோ அவரது குடும்பத்தினரோ பணம் செலுத்தியதற்கான ஆதாரம் இல்லை என முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விளக்கம் கேட்டு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு, ஜெகத்ரட்சகன் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
தங்களுக்கு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, ஜெகத்ரட்சன் மற்றும் அவரது குடும்பத்தினர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சேஷசாயி, சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணை நடத்துவதற்கான தருணம் இது எனவும், மனுதாரர்கள் தங்கள் தரப்பு வாதங்களை சட்டப்படி முன்வைக்க உரிமை உள்ளது எனவும் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர்.
விசாரணை நடவடிக்கையை தொடர்ந்து நடத்தி, விரைந்து உத்தரவு பிறப்பிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

