போதைப் பொருளை தடுக்க தவறிய தி.மு.க., அரசு த.மா.கா., தலைவர் வாசன் காட்டம்
போதைப் பொருளை தடுக்க தவறிய தி.மு.க., அரசு த.மா.கா., தலைவர் வாசன் காட்டம்
ADDED : ஜூலை 05, 2024 02:14 AM

விழுப்புரம்:''விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணப்பலம், ஆள்பலம், அதிகார பலத்திற்கு இடம் கொடுத்து ஆளுங்கட்சி பிரசாரம் செய்கிறது,'' என த.மா.கா., தலைவர் வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் அவர் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மனமாற்றம் தேவை. வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமான தேர்தலாகவும், மக்கள் விரோத தி.மு.க.,விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும்.
இடைத்தேர்தலை பொறுத்தவரை, தி.மு.க., வின் அதிகார துஷ்பிரயோகம் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் கண்டும், காணாமலும் உள்ளது. பண பலம், ஆள் பலம், அதிகார பலத்திற்கு இடம் கொடுத்து பிரசாரம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் பிரச்னையை தீர்க்க தகுதியற்ற அரசாக உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தோரின் வீட்டிற்கு ஆறுதல் கூறக்கூட முதல்வர் செல்லவில்லை. நீட் தேர்வு தமிழகத்தில்புள்ளி விபரப்படி பார்த்தால் ஏழை, எளிய மாணவர்கள் முன்னேறிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசியல் லாபத்திற்காக நீட் விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தி.மு.க., குழப்பிக் கொண்டுள்ளது. நீட் தேர்வை முறைப்படுத்துவது அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.