கேமரா பதிவு கேட்டு தேர்தல் கமிஷனில் தே.மு.தி.க., மனு
கேமரா பதிவு கேட்டு தேர்தல் கமிஷனில் தே.மு.தி.க., மனு
ADDED : ஜூன் 07, 2024 08:05 PM
சென்னை:'விருதுநகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வழங்க வேண்டும்' என, தே.மு.தி.க., சார்பில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வழக்கறிஞர் பாலமுகுந்த் கூறியதாவது:
விருதுநகர் தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதால், மானிக்கம் தாகூர் வெற்றி செல்லாது. எனவே, அவர் பதவிப்பிரமாணம் எடுக்க அனுமதிக்கக்கூடாது என, முதல் மனுவில் தெரிவித்துள்ளோம்.
இரண்டாவது மனுவில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல் முறைகேடுகள் குறித்து தனி ஆணையம் அமைத்து, சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்க, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம்.
மூன்றாவது மனுவில், விருதுநகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்த, கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாற்றம் செய்யாமல், எங்களுக்கு அளிக்கும்படி கேட்டுள்ளோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, நடவடிக்கை எடுப்பதாக, தலைமை தேரத்ல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
***